மகளுக்கு கடிதம்
என் அன்பு மகளே!
அழுகையோடு அழகாக
அகிலம் வந்து உதித்த
ஆசை மகளே!
பெண் வேண்டும் என்று ஆசைப்பட்ட உன் அப்பாவின் செல்லமாகப் பிறந்த எங்கள் செல்வ மகளே!
நீ தத்தி நடக்கும்போதும் மழலைமொழி
மிழற்றும் போதும்
கண்கள் விரிய பேசும்போதும்
கோபித்தால் விசிக்கும் போதும்
எங்கள் வீட்டு தேவதையானாய்!
அப்பாவின் செல்ல மகள்!
அண்ணன் தம்பிகளின்
அருமை சகோதரி!
அவ்வப்போது அழகாய்
அறிவுரைக்கும்
என் அருமைத் தோழி மட்டுமல்ல..
என் அன்புத் தாயாகவும்
தோற்றமளிக்கிறாய்!
நீ மருத்துவரானபோது
மனமகிழ்ச்சியில்
வானத்தில் பறந்தேன் நான்!
காதலித்தவனைக் கைப்பிடித்து
காலம் முழுதும்
அவனுடன் வாழ
காவியமாய் நீ புறப்பட்டபோது
கண்கலங்கியது நீ மட்டுமல்ல..
நாங்களும்!
குழந்தைகள் உனக்குப் பிறந்தாலும்
குறையாத பாசமும்
நிறைவான நேசமும்
என்றைக்கும் காட்டும்
அன்புமகள் நீ!
நீ வருகிறாய் எனும்போதே
நான் ஆனந்தத்தில்
ஆவலாய்க் காத்திருக்கிறேன்...
உன்னைக் காணவும்
உரையாடி மகிழவும்!
வாழ்த்துக்கள் பல!
வாமகளே..வா!
கருத்துகள்
கருத்துரையிடுக