ஊரடங்கில் மீண்டும் நாம்!



லண்டனை சுற்றிப் பார்த்தோம்!

ரயில் பயணங்கள் பற்றி ஒன்றா இரண்டா..ஏகப்பட்ட அனுபவங்கள்! படிக்கும்போது  விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது?


ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..!

என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்துவிடுவார்கள்.
பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்!

நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான்  செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா!

இரவு ரயிலில்தான் பிரயாணம்
ரிசர்வேஷனெல்லாம் கிடையாது. என் அப்பா வேகமாக ரயிலில் ஏறி சீட் பிடித்ததும்  என் அம்மா,
அப்பா கீழ் இரண்டு சீட்களில் என்  சிறிய தம்பிகளுடன்  படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்!

சீட்களுக்கு கீழே எங்கள் டிரங்குப் பெட்டிகள்! அவற்றுக்கிடையே நடமாடும் கரப்பான்பூச்சிகளையும், பாச்சைகளையும் பார்த்தால் பயத்தில் தூக்கமே வராது! எப்படா இறங்குவோம் என்று விழித்துக் கொண்டே இருப்போம்! இன்று நினைத்துப் பார்க்கும்
போது வேடிக்கையாக இருக்கிறது!

இப்படி ஆரம்பித்த பயணம் சிறிது சிறிதாக முன்னேறி ரிசர்வேஷன், மூன்றாம் வகுப்பு AC, இரண்டு, ஃபர்ஸ்ட் கிளாஸ் என்று உயர்ந்து இப்ப..ரயில் நேரமாகும், ஃப்ளைட்ல போலாம்..என்ற அளவு மாறி விட்டோம் நாம்!

ஒருமுறை இரண்டாம் வகுப்பு ACயில் நான் என் மாமியார் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தோம். முன்பெல்லாம் டிக்கட் கம்ப்யூட்டரில் பதிவு செய்வோம். அச்சமயம் என் மகன் பெயரில் M (ஆண்)என்பதற்கு பதிலாக W
(பெண்) என்று தவறுதலாக பதிவாகி விட்டது. இதை ரயிலில் ஏறும் நேரம்தான் நாங்கள் பார்த்தோம். ஏறியபின் டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லி மாற்றலாமென்று நினைத்து விட்டோம். அவரோ
..அதெல்லாம் முடியாது. பையனை ரிசர்வேஷன் இல்லாத பெட்டியில் உட்காரச் சொல்லுங்கள்..என்று சொல்லி விட்டார்.

என் மகனுக்கு பத்து வயது. அவனோ அழுகிறான். என்ன செய்வது? நல்லவேளையாக அந்த சீட்டுக்கு யாரும் வரவில்லை. அவனை மேலே படுக்கச் சொல்லி T.E.வரும்போது முகத்தை மூடி  போர்வையைப் போற்றி விட்டு எப்படியோ சமாளித்து ஊர் வந்து சேர்ந்தோம்!

வெளிநாடுகளில் ரயில் பயணம் மிக சுகமானது. வசதியாக இருக்கும். லண்டன் சென்றபோது Club Mahendra வின் ரிசார்ட் ஓக்ஹாம் (Oakham) என்ற ரட்லேண்ட் ஏரிக்கரையில் அமைந்த அழகிய கிராமத்தில் இருந்தது.  அங்கிருந்து லண்டன் வந்து தங்கி சுற்றிப் பார்த்தோம். என் மகன் ரயிலுக்கெல்லாம் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்து கொடுத்து  விட்டான். நாங்கள் Euston என்ற இடத்தில் தங்கினோம். ரயிலில்தான் செல்ல வேண்டும். எதிரிலேயே ஸ்டேஷன் இருந்தது வசதியாக இருந்தது. ரயில்கள் மிக அழகாக சுத்தமாக இருப்பதுடன் அதிவேக ரயில்கள்!

நாங்கள் திரும்ப ஓக்ஹாம் வருவதற்கு ஸ்டேஷனில் காத்திருந்தோம். லண்டனில் ஆங்கிலம் எல்லா இடத்திலும் இருந்ததால் கஷ்டமில்லை. திடீரென்று எங்கள் ரயில் ரத்தாகி விட்டதாக அறிவித்
தார்கள். எங்களுக்கு பயமாகி விட்டது. எப்படி செல்வது என்பது புரியவில்லை. என் கணவர் அங்கிருந்த அலுவல
கத்தில் விசாரித்தபோது அங்கிருந்தவர் ஒரு ரயில் நம்பரை சொல்லி லீசெஸ்டர்(Leicester) போய் அங்கிருந்து மாறிப் போகவேண்டும் என்று லண்டன் இங்கிலீஷில் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்!

லண்டன் ஆங்கில உச்சரிப்பு நமக்கு சரியாக புரிவதில்லை. எங்களுக்கோ தலையும் புரியவில்லை..காலும் புரியவில்லை! பக்கத்தில் நின்றிருந்த இன்னொருவரிடம் கேட்டபோது அவர் சற்று நிறுத்தி புரியும்படி சொல்லி ப்ளாட்ஃபார்ம் நம்பர் சொல்லி மூன்று நிமிடத்தில் ரயில் கிளம்ப இருப்பதாகவும், வேகமாகப் போகும்படியும்  சொன்னவுடன் நாங்கள் எடுத்தோம் ஓட்டம்! சரியாக நாங்கள் ஏறிய அடுத்த நொடி ரயில் கிளம்பியது. நான் அப்படியே மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டேன்.

டிக்கெட் செக்கர் நாங்கள் சற்று நிதானமானதும் லீசெஸ்டர் என்ற ஊரில் இறங்கி வேறு ரயில் மாறிச் செல்லும்படி பொறுமையாக சொன்னார். அந்த ரயிலில் டீ,காஃபி விற்றுக் கொண்டு வந்த ஒரு வட இந்தியரிடம் காஃபி சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தோம்.

எப்போதும் என் பிள்ளைகள் எங்களுடன் வருவதால் நாங்கள் ஜாலியாகப் போவோம். என் மகனால் வரமுடியாததால் லண்டனில் ஆங்கிலம்தானே என்பதால் தனியாகக் கிளம்பி விட்டோம்! இந்த ரயில் அனுபவம் மறக்க முடியாததாகி விட்டது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)