ஊரடங்கில் நான்..ஊர் சுற்றுவோமா..
என் கனவு நனவானது!
பயணங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன... உயிர்ப்பூட்டுகின்றன! வாழ்வை ரசிக்க வைக்கின்றன.எனக்கு பல நாடுகளை சுற்றிப் பார்ப்பது மிக பிடித்தமானது. என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் அவற்றை சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது! கிட்டத்தட்ட பதத்து நாடுகளுக்கு மேல் சென்றிருந்தாலும் என் மனம் கவர்ந்த நாடு கம்போடியா.
என் பிள்ளை சிங்கப்பூரில் இருந்தபோது கம்போடியாவுக்கு சென்றோம். இந்திய அரசர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட அங்குள்ள அங்கோர்வாட் ஆலயம்தான் உலகின் மிகப் பெரிய கோயில் என போற்றப்படுகிறது! எந்த இடம் சென்றாலும் அங்குள்ள சிறப்புகளைப் படித்து எழுதி வைத்துக் கொண்டே செல்வேன்.
அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து,
வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோ
வினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது.
முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக காம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு,
தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது காம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1400) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.
அங்கோர் என்ற நகரம் அந்நாளில் 'க்மேர்' பேரரசின் தலைநகரமாக விளங்கியது.ஒரு லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்டிருந்த இவ்வூர் உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
ஆயிரம் லிங்க நதி..
இங்கு அரசாண்ட மன்னர்கள் சைவம், வைணவம், பௌத்தம் என்று பல மதங்களை கடைப் பிடித்தனர். ஆலயங்களையும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாகக் கட்டியுள்ளனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் சிவபக்தனாக விளங்கினான்.
நாம்குலேன் என்ற மலையில் நதியில் பல சிவலிங்கங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றவன்.'பால் ஸ்பீன்' (Khbal Spean) மற்றும் 'நாம் குலேன்' (Khnam Kulen) என்ற மலைகளில் ஓடும் நதி 'ஆயிரம் லிங்க நதி' எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும், கிரீச்சிடும் பல பூச்சிகளும் நிறைந்த கரடு முரடான காட்டு மலைப் பாதையில் சுமார் 2 கி. மீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரேவடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். இது தவிர நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன்,
கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சயாம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளால் அடிக்கடி தாக்கப்பட்டதால் கம்போடியா சீர்குலைந்து, தம் சிறப்புகளை இழந்து காடுகளுக்குள் மறைந்து போனது. அவ்வழியே யாத்திரை சென்ற புத்த பிட்சுக்கள் இவ்வாலயத்தை தியானம் செய்யும் இடமாக கொண்டனர். பல நூறு ஆண்டுகள் காடுகளுக்குள் காணாமல் போயிருந்த அங்கோர்வாட் ஆலயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை மேற்கத்தியரான 'ஹென்றி மோஹாட்' என்பவரையே சேரும். 1860ல் அவர் கண்டுபிடித்த பின்பே, அங்கோர்வாட் ஆலயங்களின் பெருமையும், அழகும் வெளி உலகத்துக்குத் தெரிந்து, சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறியது.
இரண்டு சிங்கங்களைக் காவலாகக் கொண்ட மேற்கு வாயில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடக்க பாலம் உள்ளது. நீண்ட ஐந்து, ஏழு தலை நாகங்களைக் காவலாகக் கொண்டு, நீண்ட பிரகாரங்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள், கல்தூண்களால் கட்டப்பட்ட வரிசையான சன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் கொண்ட இவ்வாலயங்
களின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.
'அப்சரஸ்' எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றங்களைக் காணலாம். கோபுர நுழைவு வாயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கோவிலில் மட்டும் 2000 அப்சரஸ் சிற்பங்கள் உள்ளதாம்.
கீழ்நிலையின் சுற்றுச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள குருக்ஷேத்திரப் போர், ராமாயணக் காட்சிகள், சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் மற்றும் தேவாசுரர் பாற்கடல் கடையும் காட்சியும், சூரியவர்மன் எதிரி நாடுகளுடன் போரிட்ட காட்சிகளும் தத்ரூபமாக மனம் கவரும் விதத்தில் காட்சியளிக்கின்றன.
அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதத்தையும் மாறிமாறிப் பின்பற்றியதால் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் மகாவிஷ்ணு சிலை வித்தியாசமாகக் காணப்படுகின்றது.
ஏழாம் ஜெயவர்மன் தன் தாயாருக்காக 'ப்ரக்ஞபரிமித்ரா' என்ற சிலையுடன் கட்டிய ஆலயம் 'டா ப்ராம்'. 39 கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம் நீண்ட பிரகாரங்கள்,
கலையழகு மிக்க நுழைவுவாயில்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு, துவாரபாலகர், அப்சரஸ் சிலைகள் என்று இன்னமும் அழகாகக் காணப்படுகிறது.
செல்வச் செழிப்புடன் விளங்கிய இவ்வாலயம் புத்த விஹாரமாக இருந்ததாம். 3000 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் பல ஊழியர்கள் பணிபுரிந்த தங்க, வெள்ளி நகைக் கடைகளும் இங்கு இருந்ததாம். இவ்வாலயத்தில் தங்கமும், விலைமதிப்பற்ற முத்து, உயர்ரகக் கற்கள் இருந்ததாகவும் இவ்வாலயச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.
புதுமையான அனுபவத்தைத் தரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக