தம்பதியர் தினம்

 

தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். அது மே மாதம்  29ம் தேதியன்று  உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சில நாடுகளில்  விடுமுறை வழங்குகிறார்களாம்! தம்பதிக்கு டூர் பேக்கேஜ் போட்டுக் கொடுத்து விட,  ஜாலியாக சுற்றுலா சென்ற இடத்தில் கேக் வெட்டி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்து
வார்களாம்!

கட்டிட அஸ்திவாரம் போல், கல்யாண பந்தமும் காலங்காலமாய் நிலைத்து நிற்பதும் அவசியம்தானே!
அது ஆண்டிப்பட்டி கிராமத்துல நடக்கிற கல்யாணமோ.. இல்லை  அம்பானி வீட்டு கல்யாணமோ.... ஊரைக் கூட்டி விருந்து படைத்து, விதவிதமாய் ஆடை அணிந்து மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் நமக்கு நிகராக யாருண்டு!

அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாறி. தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம்.

பெண் பார்ப்பதில் துவங்கி, பெண்ணை கெட்டி மேளம் முழங்க, அக்னி சாட்சியாக தாலி கட்டி, வரவேற்பு, தடபுடல் விருந்து நடக்கும் நிகழ்வுகளை மணமக்கள்  வாழ்க்கை முழுக்க ஒரு போதும் மறக்க முடியாது. எப்போது நினைத்து பார்த்தாலும் மலரும் நினைவுகளாக மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது  அந்த திருமண நாள்தான்!

திருமண வாழ்க்கைஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான புதிய வாழ்க்கை துவக்கம்! இருவரும் இணைந்து இருமனம் ஒன்றாகி இறுதிவரை வாழ வேண்டியதற்கான ஆரம்பம்!

திருமணத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா என்றால் இல்லை.... இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து செல்லுதல், கோபமின்மை, ஒவ்வொரு நாளையும் தங்கள் திருமண நாள் போல் எண்ணி அளவில்லா காதலுடன் வாழ்வதே சிறப்பானது!

இப்போது தனித்து வாழும் தம்பதி தங்களுக்குள் ஒரு பிரச்னை வந்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே பிரிந்து வாழ்வோம் என்ற முடிவுக்கு வந்து  பிடிவாதமாக பிரிவதே தீர்வு என திருமண பந்தத்தை முறித்துக் கொள்கின்றனர். விட்டுக் கொடுத்தலும், மனம் ஒத்தும் வாழ்ந்தால் எந்த பிரச்னைகளையும் எளிதில் சமாளிக்கலாம். அதைத்தான் இந்த தம்பதியர் தினமும் உணர்த்துகிறது.

சின்னச் சின்ன விஷயங்களுக்காக அர்த்தமற்ற ஈகோவை தூக்கிக்கொண்டிருக்கும் தம்பதியர் அவற்றை தொலைத்து தலைமுழுகி இனிய இல்லறத்துக்கு திரும்ப வேண்டும். காதலிக்க காலம் கடந்துவிடவில்லை..வாழ்வின் எல்லை வரை காதலிக்கலாம்!

உலக அளவில் பல சம்பவங்களின் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்
படுகிறது. பெண்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இவை சமீப காலமாகவே கொண்டாடுகிறோம்.

அந்த நாட்களில் நம் அம்மா அப்பாவுக்கெல்லாம் அந்த  வாழ்த்து சொன்னோமா.
'உன்னைப் போல் எவருமில்லை' என்று கட்டியணைத்து முத்தம் கொடுத்ததுண்டா? இன்று என் மகளும்,  மகனும் அந்நாட்களில் என்னை வாழ்த்தி  சந்தோஷப் படுத்தும்போது  நான் அப்படி செய்ததில்லையே என்று மனம் வருந்துவதுண்டு.

தம்பதியர் தம் வாழ்க்கையில் இணைந்த தருணம், இதுவரை பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 'மே 29 ல் உலக தம்பதியர் தினம்'  கொண்டாடப்
படுகிறது. இந்த ஒருநாள் மட்டுமல்ல...ஒவ்வொரு
நாளையும் தம்பதியர் தினத்தைக் கொண்டாடி அன்பையும் காதலையும் பரிமாறிக் கொண்டு  வாழ்க்கையை சுவையாகவும் சுவாரசியமாகவும் ஆக்கிக் கொள்வோம்!

அனைத்து  தோழிகளுக்கும் தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள் 💐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1