என் எண்ணம்..என் எழுத்து! பல மொழிகளும் என் அனுபவமும்!(2)

ஆயி! மாஜி ஆயி(2)

இனி தமிழ்நாட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்தபோது என் கணவருக்கு பதவி உயர்வோடு மீண்டும் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூருக்கு
மாற்றல்!

நமக்குதான் இந்தி தெரியுமே என்று 'கெத்'தாக இருந்தேன்! அங்கு சென்றதும்தான் புரிந்தது மகாராஷ்டிரமொழி மகா கஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்களுமாக
நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்!

இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை பஸா என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் 'டீக்ஹை' என்று சொல்ல சோபாவைக் காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறார்கள் என்று! அசட்டு சிரிப்புடன் அமர்ந்தோம்!

அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல் சரவெடிபோல் விடாது பேச 'அச்சாஅச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்களுக்கு இந்தி
புரியவில்லை. அவர்கள் பேசியதில் சாய் என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டால் சரி என்று ஓடி வந்து விட்டோம்!

என் பிள்ளை ஒருநாள் என்னிடம் 'ஆயி மாஜி ஆயி மல ஜேவன் பாய்ஜே ஆயி' என்றான். அவன் மராட்டி கற்றுக் கொண்டு விட்டானாம்! நான் எதுவும் புரியாமல் 'என்னடா..ஆயி மலம்னு! என்ன பேசற நீ' என்றதும் 'மராட்டி பேசறேன்.ஆயின்னா அம்மா' என்றான். 'அடப்பாவி..என்னை மாஜி அம்மா ஆக்கிட்டயா? எப்பவும் நான்தாண்டா உன் அம்மா' என்றேன் நான் டென்ஷனாக

'ஐயோ அம்மா.மாஜி ஆயினா என் அம்மானு அர்த்தம்'.
'அப்பறம் ஏதோ மலம் ஜீவனம்னியே. 'மல ஜேவன் பாய்ஜேன்னா எனக்கு சாப்பாடு வேணும்னு அர்த்தம்' என்றான்.
இக்கட, அக்கட, புடே ,காலி,
பாய்ஜே,நக்கோ என்று  எப்படியோ மராட்டியும் கற்றுக் கொண்டேன்!

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பீகார் தம்பதிகள் குடியிருந்தனர். அவர்களின் இரண்டு வயது பெண் குழந்தை எப்பவும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். ஒருநாள் நான் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடியபோது என் குழந்தைகள் சுவரில் ஒட்டி வைத்திருந்த ஷாருக்கான் புகைப்படத்தைக் காண்பித்து 'பாப்பா பாரு' என்று சொல்ல, சரியாக உள்ளே நுழைந்த அவள் அம்மா 'ஆண்ட்டி! க்யா போலா ஆப்னே? ஷாருக்கான்கோ பப்பா போல்தியா(என்ன சொல்கிறீர்கள்? ஷாருக்கான் அவளுக்கு அப்பாவா?)என்று கோபமாகக் கேட்டாள். எனக்கு பிறகுதான் புரிந்தது பாப்பா என்றால் இந்தியில் அப்பா என்று பொருள் என்று!

நான் ஏதோ சொல்லப்போக இப்படி அர்த்தம் எடுத்துக் கொண்டு விட்டாளே என்று தோன்றியது இது மட்டுமா?
காக்கா என்றால் நமக்கு காகம். வடக்கில் காக்கா,காக்கி  என்றால் சித்தப்பா, சித்தி என்று பொருள்.

அதன்பின் ஒரு வருடம் பெங்களூர் வாசம்! ‘அப்பாடி! பெங்களூரில் நிறைய தமிழர்கள் உண்டு. கல்கண்டு தமிழில் கலகலக்கலாம்' என்ற என் ஆசையில் மண்! எங்கள் வீட்டுக்காரம்மாவோ ‘பச்சைக் கன்னடத்தி!’ அவள் வீடு சென்ற என்னை பன்ரி, குத்துக் கொட்றி (‘என்ன மரியாதையில்லாமல் குட்றி என்கிறாளே, என்ன கேட்கிறாள்’) என்று நான் ‘திருதிரு’க்க, நாற்காலியைக் காட்டியதும்தான், சட்டென்று நம் 'சென்னைத் தமிழ்’ குந்திக்க  ஞாபகம் வர அமர்ந்தேன்!

'நிம்ம எஜமானரு ஏனு மாடுதாரு?’ (மாடுக்கு எஜமானரா?!) 🐐நிம்ம ஹெஸரு ஏனு?’ (ஏசுவைப் பற்றிக் கேட்கிறாளா!) நீரு சாக்கா பேக்கா?' (கடைசியா என்னை பேக்குன்னுட்டாளே!) என்று ‘சரவெடி’ மாதிரி கேள்விகளைத் தொடுக்க, ஒரு அட்சரம் கூட புரியாமல் புஸ்வாணமாகி நான் வீடு திரும்பினேன்! பிறகு அவற்றுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்!

வெளி மாநிலம் சரி, நம் மாவட்டத்துக்குள்ளும் சென்னைத் தமிழ், தஞ்சைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்று பேச்சு வழக்கு வித்தியாசமாகத்தானே இருக்கிறது?

நாகர்கோவிலில் என் பிறந்த வீட்டுக்குப் போனபோது, என் அம்மாவுக்குத் தெரிந்த மாமி வந்து, 'ஏண்டி வீச்சாரிக்காயோ?  'உடம்பு வண்ணமே வைக்கல்லையே?’ என்று கேட்க, நான் அர்த்தம் தெரியாமல் முழிக்க, அம்மாதான் பிறகு விளக்கினார்.அது மலையாளத்தமிழ் என்றும், ‘வீச்சாரிக்காயோ’ என்றால் ‘நன்றாக இருக்கியா’ என்று அர்த்தமாம். ‘உடம்பு வண்ணமே வைக்கவில்லையே’ என்றால் ‘உடம்பு பெருக்கவே இல்லையே’ என்று பொருளாம்!

அங்கு கணவரை மாப்பிள்ளை என்பார்களாம்.என் பிரசவம் அங்குதான். என் அம்மாவிடம் நர்ஸ் 'உங்க மாப்பிள்ளை இன்னிக்கு வரலயா?' எனக் கேட்க, 'என் மாப்பிள்ளை டில்லி பக்கம் இருக்கிறார். இனிதான் குழந்தையைப் பார்க்க வருவார்' என அவளோ'அப்ப நேற்று வந்தது யார்?' என்றதும்தான் அவள் என் அப்பாவைக் கேட்கிறார் எனப் புரிந்ததாம்! கடையில் சர்க்கரை கேட்க வெல்லம் கொடுத்தாராம் கடைக்கார்!. பஞ்சாரை என்றால் சர்க்கரை!

ஈரோடில் பெண்களை பிள்ளை என்பார்கள். நான் அங்கு சென்ற புதிதில் என் முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை என்றபோது 'உங்க வீட்டில ஒரு பிள்ளைதான இருக்கா' என்றதும் தான் அங்கு பிள்ளை என்றால் பெண் என்று அர்த்தமே புரிந்தது.கொங்கு மக்கள் தமிழ் பேசும் விதமே ஒரு தனி அழகு!

விளக்கமாற்றுக்குக் கூட, ‘வார்கோல், சீமாறு, பெருக்குமாறு, துடப்பம்’ என்று ஊருக்கு ஒரு பெயர் இருக்கும்போது மற்ற பேச்சுகளிலும் வித்தியாசம் இருப்பதில் வியப்பில்லையே!?

இப்படி மாநிலம்தோறும் சென்றதன் பலன் பல மொழிகளைத் தெரிந்து கொண்டதுடன் அவர்களின் பண்டிகை பழக்க வழக்கங்கள் சமையல் முறைகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு  கிடைத்தது உண்மை!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)