என் இனிய தோழி!


நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அப்பாடா' என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது!


எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட்டைப் போலவும் வராது!

வங்கி அதிகாரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்;  பல ஊர்களில், மாநிலங்களில்  வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும்.

பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை!

ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம்
ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிமா, சித்தி குழந்தைகளுடன் ) சண்டையே நடக்கும்!

கிழக்கு வாசல் படத்தில் 'பச்சமலைப் பூவு' பாடலில் ரேவதி ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து அது போல ஆட ஆசைப் பட்டிருக்கிறேன்!

குடந்தையில் பார்த்துப் பார்த்து நாங்கள் ஒரு வீடு கட்டினோம்.அதில் ஊஞ்சல் ஆசையில் மேலே கொக்கி எல்லாம் வைத்தேன்.என்ன செய்ய...ஒரே வருடத்தில் என் கணவருக்கு அடுத்த மாற்றல்! மீண்டும் வாடகை வீடு! பின் மகாராஷ்டிராவுக்கு மாற்றல். சில தவிர்க்க முடியாத காரணங்களால் மனமின்றி வீட்டை விற்றோம்.

குழந்தைகள் படித்து முடித்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல, மீண்டும் அவர்களுடன் ஊர் ஊராகப் பயணம். மனதில் மட்டும் ஊஞ்சல் ஆசை குறையாமல் இருந்தது. இத்தனை ஊர்களில் இருந்தும் ஒருவீட்டிலும் ஊஞ்சல் போட வாய்ப்பில்லை. மூங்கில், கயிற்றினால் செய்யப்பட்ட ஊஞ்சலை வாங்கி அதில் ஆடியும், பாரம்பரியமான நம்மூர் மர  ஊஞ்சலில் ஆடும் சந்தோஷம் அதில் கிடைக்கவில்லை.

எல்லா கடமைகளும் முடித்த நிலையில் நாம் தனியாக ஒரு வீடு வாங்கி, அங்கு என் மனம் போல் வாழும் ஏக்கம் இருந்ததைப் புரிந்து கொண்டார் என் அன்புக் கணவர். என் பிள்ளைகளிடம் இதைப் பற்றி சொல்ல மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்கள்.

திருச்சியில் மூன்றாம் மாடியில் ஒரு வீடு வாங்கியபோது ஊஞ்சல் வளையங்களைப் பதித்து ஊஞ்சல் போட்டு சில வருடங்கள் ஆனந்தமாக ஆடினேன். அங்கு பேருந்து செல்லும் சாலையில் வீடு வாங்கியதால் சத்தம் மிக அதிகம். என் குழந்தைகள் வரும்போது தூங்க முடியாமல் மிக கஷ்டமாக இருந்தது.

தனி வீடு வாங்கும் ஆசை என் கணவருக்கு உண்டு. ஆனால் தனி வீடுகள் பாதுகாப்பு இல்லை என்பதால் என் பிள்ளைகள் அனுமதிக்கவில்லை. அச்சமயம் கும்பகோணம் புண்யக்ஷேத்திரத்தில் திண்ணை, தூண், ஊஞ்சல், அருகிலேயே காவிரி எல்லாம் அமைந்த பாரம்பரிய வீடுகள் நம் விருப்பப்பட்டபடி கட்டிக் கொள்ளலாம் என்ற  விளம்பரம் வர...ஆஹா விடுவோமா! அங்கு சென்று பார்க்க எல்லாம் எங்களுக்கு பிடித்துப் போயிற்று!

அங்கு இடம் வாங்கி கீழேயும் மாடியிலுமாக எங்கள் ஆசைப்படி ப்ளான் போட்டு வீடு கட்டினோம். இங்கு கீழே மட்டுமன்றி மாடி கூடத்திலும் ஒரு ஊஞ்சல் போட்டோம்.  ஆஹா! அந்த ஊஞ்சல் ஆடும் சுகம் இருக்கிறதே....என்ன சொல்ல! தினமும் ஊஞ்சலில் வேகமாக ஆடிக் கொண்டுதான் டி.வி. பார்ப்பேன்; புத்தகம் படிப்பேன்!

நானும், என் கணவரும் எங்கள் அந்த நாள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஊஞ்சலில் தான்!

என் பேரன்,பேத்திகள் விடுமுறை எப்ப விடும் என்று காத்துக் கொண்டு வந்து விடுவார்கள் ஊஞ்சல் ஆட!

வெய்யில் நாட்களில் ஊஞ்சலில் வேகமாக ஆடினால் இயற்கை காற்று வீசி உடலைக் குளிர்விக்கும். என் வீட்டுக்கு வருபவர்கள் ஊஞ்சலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்! யார் வந்தாலும் ஊஞ்சலில் அமர்ந்து சற்று ஆடி ரசித்து விட்டே செல்வார்கள்.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. எனக்கு என் பெண், பிள்ளைகள், மருமகள்களுடன் ஆடிக் கொண்டே அரட்டை அடிப்பது அலாதி சுகம்!


வாசல் வழியே நம் வீட்டுக்கு வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடிக்  களிப்புற்று நமக்கு நல்லது செய்வார்கள் என்பது ஒரு ஐதீகம். அதனாலேயே  ஊஞ்சலை வாஸ்துப்படி  அந்நாட்களில் கூடத்தில்  அமைத்தார்கள்.சுப காரியங்களைஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி கிடைக்கும்.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் சென்று மூளை சுறு சுறுப்பாகிறது.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும்  ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவதால் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகும்.

ஊஞ்சல் ஆடுவது உடல் ஆரோக்கியத்துடன் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.எனக்கு மன வருத்தம் ஏற்பட்டால் ஊஞ்சலில் அமர்ந்து வீசி ஆடினால் சட்டென்று கலக்கம் நீங்கி தெளிவு பிறக்கும்; மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

நான் ஒரு எழுத்தாளர்; ப்ளாகர். கம்ப்யூட்டரில் பலமணி நேரம் அமர்ந்து வேலை செய்து சோர்வு ஏற்படும்போது சற்று நேரம் கைகளை ஊன்றி, கால்களை உந்தி நிமிர்ந்து உட்கார்ந்து ஊஞ்சல் ஆடும்போது முதுகுவலி,கழுத்துவலி காணாமல் போகிறது.

வெளியில் போய்விட்டு வந்து சில நிமிடங்கள் ஊஞ்சல் ஆடினால் எல்லா களைப்பும் போய் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

என் கனவை மெய்ப்பட வைத்து, என்னை எப்போதும் சந்தோஷப் படுத்தும் என் மனதுக்கு இனிய அழகான ஊஞ்சல் என் இனிய தோழி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)